murugan special

தைப்பூச விழாவின் சிறப்பு தெரியுமா?





தைப்பூசத்திருவிழா, ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் பிரசித்தி பெற்ற விழாவாக உள்ளது. இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை (பார்வதி) கைலாசநாதருடன் (சிவன்) தனிக்கோயிலில் அருளுகிறாள். இவர்களது சந்நிதியின் நடுவில் முருகன் சந்நிதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சந்நிதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சந்நிதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை முக்கிய தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். காலப்போக்கில் மலைக்கோயில் முருகன் பிரபலமாகவே, முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது. ஆனாலும், பழமை மாறாமல் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. தைப்பூசக் கொடியேற்றம் இங்கு தான் நடக்கும். விழாவின்போது, இக்கோயிலில் உற்சவர் முத்துக்குமாரசுவாமி (முருகன்) தினமும் எழுந்தருளுவார். விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு வீதியுலா செல்கிறது. ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் பங்குதாரராக பழநி முருகனை கருதுகின்றனர். தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்து விடுகின்றனர். தைப்பூச விழா மற்றும் புதுக்கணக்கு ஆரம்பிக்கும் சமயங்களில் ஏராளமாக குவிகின்றனர்.
முருகனுக்கு முதல் கோயில்: முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கோயில் புதுக்கோட்டை அருகேயுள்ள ஒற்றைக்கண்ணூர் கோயில் என கூறப்படுவதுண்டு. இங்கு முருகன் ஒரு திருக்கரத்தில் ஜபமாலை ஏந்தியுள்ளார். மறுகரம் சின்முத்திரையுடன் உள்ளது. முருகப்பெருமானுக்கு வாகனமாக யானை உள்ளது. இந்த கோயில் முத லாம் ஆதித்த சோழனால்கட்டப்பட்டது.
மானசீக குருவாக இவரை ஏற்கலாம்: வெகுதொலைவில் இருந்தபடியே, திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், திசை நோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு முருகனே எடுத்துச்சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார்களில் முத்துச்சுவாமி தீட்சிதரும் ஒருவர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். திருத்தணி முருகன் சந்நிதியில் அமர்ந்து தியானித்த போது, முருகன் பாலகனாய், அவர் முன் தோன்றி கற்கண்டு கொடுத்தார். உடனே தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை குருகுஹ என்று போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். கலியுகத்தில் சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில் திருத்தணி முருகனையே மானசீக குருவாக ஏற்கலாம்.
வடசென்னிமலை பாலசுப்பிரமணியர்: சேலம் மாவட்டம் வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயிலில் பக்தர்கள் வீடு கட்டுவதற்காக வித்தியாசமான வழிபாடு செய்கிறார்கள். மலைக்குச் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதி இருக்கிறது. இதனருகே அவ்வைப்பாட்டி, முருகன் சிலைகள் உள்ளது. இங்கு பக்தர்கள் கற்களை அடுக்கி வைத்து சுவாமியை வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தங்களது வீடு கட்டும் கனவு நிறைவேறும் என நம்புகின்றனர். திருப்பதி மலை ஸ்ரீவாருபாதம் பகுதியில், இதேபோல கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பண்பொழி குமாரசாமி கோயில்: திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகிலுள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் ( 12 கி.மீ.,) விசாக நட்சத்திரத்தில் பிறந்தோருக்கான பரிகாரத்தலம். வி என்றால் மேலான, சாகம் என்றால் ஜோதி, விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்று மூன்று வகையான ஒளிக்கிரணங்களை உடையது. இந்த கிரணங்கள் இம்மலையில் படுவதால், இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவசியம் தரிசிக்க வேண்டும். 500 அடி உயரத்தில், 544 படிகளுடன் அமைந்த குன்றுக்கோயில் இது. மலைக்குச் செல்ல வாகன வசதி உள்ளது. விசாகம், கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை. முற்காலத்தில் இந்த நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்களது முழு ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் ஓட வள்ளி, நளமூலிகை, திருமலைச்செடி ஆகிய மூலிகைகள் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக திருமலைச் செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் சேர்த்து, முருகனுக்கு பூஜித்திருக்கிறார்கள். இத்தல முருகனை, தன் மகனாக ஏற்றுக் கொண்ட சிவகாமி பரதேசி அம்மையார் என்பவர், மலைஅடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் கற்களை வைத்து இழுத்துச் சென்று மலையுச்சியில் மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார்.
கதிர்காமம் கதிரேசன்: முருகப்பெருமானின் திருத்தலங்களில் கதிர்காமத்திற்கு சிறப்பிடம் உண்டு. இப்பெருமான் கதிரேசன் என்று அன்புடன் அனைவராலும் போற்றப்படுகிறார். கொழும்பிலிருந்து 230 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. கருவறையில் எவ்வடிவில் இறைவன் இருக்கிறான் என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. சந்நிதியின் திருக்கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் திரையில் மயில் மீது இருதேவியருடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் உள்ளது. இதைப்போன்று மேலும் பல திரைச்சீலைகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இப்பெருமானின் சந்நிதி திறக்கப்படுகிறது. மற்ற காலங்களில் திரையிட்டே பூஜை நடத்தப்படுகிறது. இங்கு ஆடி உற்சவம் பிரபலமானது. ஆடி அமாவாசையன்று ஆரம்பித்து பவுர்ணமியில் தீர்த்தவாரி நடைபெறும். தினமும் யானைமீது ஊர்வலமாக ஒருபெட்டி எடுத்துச் செல்லப்படும். அந்த பெட்டிக்குள் முருகனுக்குரிய யந்திரம் இருக்கிறது. இக்கோயிலின் பின்னால் உள்ள அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகிறார்கள். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடுவது மத ஒற்றுமைக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது.
இலஞ்சி வரதராஜகுமாரன்: காஷ்யபர், கபிலர், துர்வாசர் ஆகிய முனிவர்களிடையே பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களில் யார் சிறந்த கடவுள் என்று அறிவதென ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு வேண்டி முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தனர். தானே ஆதிபரம்பொருள் என்பதையும், படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களையும் தானே முன்னின்று நடத்துவதையும் அவர்களுக்கு உணர்த்தினார். இப்பெருமானே இலஞ்சி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இவருக்கு வரதராஜகுமாரன் என்று பெயர். மூன்று முனிவர் களுக்கும் முருகன் அருளிய நிகழ்ச்சியின் அடிப்படையில் ஐப்பசி மாத சஷ்டி விழாவின் போது முதல்நாள் படைக்கும் தொழில் புரியும் பிரம்மனாகவும், இரண்டாம் நாள் காக்கும் தொழில்புரியும் விஷ்ணுவாகவும், மூன்றாம் நாள் அழித்தல் தெழில் புரியும் ருத்ரனாகவும், நான்காம் நாள் மறைத்தல் தொழில் புரியும் மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் அருளல் தொழில்புரியும் சதாசிவமாகவும் வந்து தரிசனம் தருகிறார். திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே இலஞ்சி அமைந்துள்ளது. இலஞ்சி என்றால் நீர்நிலை, அருள், செல்வம் என்று பொருள். நீரினைப் போல குளிர்ச்சியாக அடியவர் வேண்டிய வரங்களை அருள் வழங்கும் கலியுகவரதனாக முருகப்பெருமான் இலஞ்சியில் வீற்றிருக்கிறார்.
ஆட்டுக்கிடா முருகன்: முருகனுக்கு மயிலுடன் ஆட்டுக்கிடாவும் சில கோயில்களில் வாகனமாக இருக்கிறது. நாரதர் செய்த வேள்வியில் இருந்து ஆட்டுக்கிடா வடிவில் ஒரு அசுரன் தோன்றினான். அதை அடக்கும் சக்தி யாருக்கும் இல்லை. முருகப்பெருமான் கிடாவை அடக்க, தன் சேனைத்தலைவர் வீரபாகுவை அனுப்பினார். வீரபாகு அதை அடக்கி, முருகனிடம் ஒப்படைத்தார். முருகன் அதை தன் வாகனமாக்கிக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் விழாவில், முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி வருவார்.
படைவீடு இதுதான்: ஆறுமுகன் குடிகொண்டிருக்கும் ஆறு தலங்களையும் அறுபடைவீடு என்கிறோம். இதில் படைவீடு என்பது திருச்செந்தூர் தலத்தையே குறிக்கிறது. அரசன், தன் படையாட்களுடன் தங்கியிருக்கும் இடத்தை, படைவீடு என்பர். அதுபோல அசுரனை அழிக்க முருகப்பெருமான், தன் படைகளுடன் திருச்செந்தூரில் தங்கியிருந்தார். எனவே இத்தலமே ஆரம்ப காலத்தில் படைவீடு என்றழைக்கப்பட்டது. பிற்காலத்தில் வீரத்தின் சின்னமாக இருந்த முருகன் குடி கொண்டுஇருக்கும் அனைத்து தலங்களையும் படைவீடாக அழைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. படைவீடு என்றால் குன்று என்றொரு பொருள் உண்டு. எனவே குன்றில் குடியிருக்கும் முருகனின் தலங்களுக்கு இப்பெயர் வந்ததாகவும் கருதலாம்.
நாகசுப்ரமணியர்: தேனி மாவட்டம் கோடங்கிபட்டி தீர்த்தத்தொட்டியில் உள்ள விருப்பாச்சி ஆறுமுக நாயனார் கோயிலில் நாக சுப்பிரமணியர் இருக்கிறார். கருவறையில் மூலவருக்கு அருகில் சிறிய மூர்த்தியாக நாகத்தின் மத்தியில் வலதுபுறம் திரும்பிய மயிலுடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். விசேஷ காலங்களில் இவ்விரு சுவாமிகளுக்கும் சந்தனம், அரிசிமாவு காப்பு அலங்காரம் செய்கின்றனர். கோயிலுக்கு அடியில் தீர்த்தம் என்றும் வற்றாமல் எப்போதும் சுரந்தபடி இருக்கிறது. இதன் பெயராலேயே இத்தலம் தீர்த்தத் தொட்டி என பெயர் பெற்றிருக்கிறது. இவரை வழிபட்டவர்க்கு மனதில் நினைத்தது நடந்தேறும்.
நள்ளிரவு பூஜை: நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக் குமாரர் உற்சவராக இருக்கிறார். இவர், தாரகாசுரனை அழித்தபோது, காயம் பட்ட தனது படைவீரர்களுக்கு வைத்தீஸ்வரனாக இருக்கும் தன் தந்தையிடம் வைத்தியம் செய்து கொள்ள வந்ததாக வரலாறு. இவருக்கு நள்ளிரவு நேரத்தில் பாதத்தில் சந்தனம் பூசி, புனுகு, பச்சைக் கற்பூரம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பால் அன்ன நைவேத்யம் படைத்து பூஜை செய்கின்றனர். அசுரனை அழிக்க போர் செய்ததால் கோபத்துடன் இருக்கும் முருகனை சாந்தம் செய் வதற்காக இந்த அபிஷேகங்களை செய்வதாக சொல்கிறார்கள்.
வள்ளி அவதரித்த தலம்: சித்தூர் (ஆந்திரா).  இந்த பகுதியை ஆட்சி செய்த வேடர் தலைவன் நம்பிராஜனின் மகளாக வளர்ந்தாள். முருகனும், வள்ளியும் திருத்தணியில் காதல்மணம் செய்து கொண்டனர்.
கொண்டைச் சேவல் கூவும் நேரம்:  கீழ்வானில் சூரியன் உதிக்கும் முன்னே சேவல் விடியலை நமக்கு அறிவிக்கிறது. இது, வாழ்வு என்னும் அறியாமை தூக்கத்தில் நாம் இருப்பதையும், அது தற்காலிகமானது என்பதையும், இந்த உலகம் வாடகை வீடு என்னும் விழிப்பு நிலையைப் பெற வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. முருகப்பெருமானும் சூரபத்மனும் போரிடும் போது, சூரன் மாயசக்தியினால் மாமரமாகி நின்றான். முருகன் தன் வேலினால் மரத்தை இரண்டு கூறாகப் பிளந்தார். ஒருபுறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாறியது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றார். தான் என்ற எண்ணம் தான் மாமரம். இந்த மாமரத்தை வேல் பிளந்தது போல், ஞானத்தால் நம்மை அறிந்தால் கடவுள் நிலையை அடையலாம். கொக்கு என்றால் மாமரம் என்றும் பொருளுண்டு. சேவல் கொக்கரக்கோ என்று கூவும். இதை கொக்கு+அறு+கோ என்று பிரிப்பர். சூரனாகிய மாமரத்தை பிளந்த மன்னவனாகிய முருகனே! என்று சேவல் கூவுவதாகச் சொல்வர்.
குழந்தை முருகனின் மயில் எது?
மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை முருகன் வேலால் பிளந்ததும் ஒருபாதி மயிலாகவும், மற்றொரு பாதி சேவலாகவும் மாறியது. அந்த மயில் முருகனின் வாகனமானது. ஆனால், குழந்தை முருகன் பவனி வரும் மயில் இந்திரனால் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு அழியா அறிவு: முருகப்பெருமானின் நான்காம் படைவீடு சுவாமிமலை. இங்கு 60 படிகள் உள்ளன. இவை பிரபவ முதல் அட்சய முடிய உள்ள 60 தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும். இந்த கருத்தைச் சொன்னவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. தந்தைக்கு மந்திரத்தின் பொருள் சொன்ன முருகன் வாழும் தலம் என்பதால், மாணவர்கள் இத்தலத்து முருகனை வணங்கி, அழியா அறிவைப் பெறலாம்.
மூன்று வேளையும் பூத்த அதிசயம்: முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடு திருத்தணி. திருப்பாற் கடலை கடைந்த போது கயிறாக இருந்த வாசுகியின் உடல் புண்ணானது. இந்த புண்ணை போக்க, திருத்தணி வந்து முருகனை வழிபட்டு, அங்கிருந்த சுனையில் குளித்தது. நோய் நீங்கபெற்று வைகுண்டம் சென்றது. இத்தலத்தில் இருந்த ஒரு கொடியில், காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளையும், தப்பாமல் பூக்கள் பூத்ததாம். அந்தப் புதிய மலர்களை கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை நடந்திருக்கிறது.
கல்வி தரும் முருகன்: திருநள்ளாறு கோயில் பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் தனிசந்நிதியில் மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவர் வலது கையை அபய ஹஸ்தமாகவும், இடது கையில் ஞானப்பழத்தை ஏந்தியும் உள்ளது. காலில் பாதரட்சையுடன் இருக்கும் இவரை வழிபட்டவர்க்கு வெற்றி கிடைக்கும் என திருப்புகழில் பாடியுள்ளார். கல்வி பயிலும் மாணவர்கள், தொழில் தொடங்குபவர்கள் தங்களின் முயற்சி வெற்றி பெற இவரை வழிபடுகின்றனர்.
சூரிய, சந்திரர் காணாத இடம்: சூரியக்கதிர்களும், சந்திர ஒளியும் பூமியில் படாத இடம் ஒன்று இருக்கிறதா? ஆம்...இருக்கிறது! அதுதான் முருகனின் மனைவி வள்ளி பிறந்த வள்ளிமலை. இந்த கோயிலில் சுனை ஒன்று உள்ளது. இதில் ஒளியே பட்டதில்லை. இதில் தான் வள்ளி நீராடினாள். மன அமைதி தரும் இத்தலத்தில் ஒரு முறை வணங்கினால், கோடி முறை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
முருகன் கையில் அருணகிரி: மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். பிரபுடதேவராயன் என்னும் மன்னன்மூலமாக, அருணகிரிநாதரை தேவலோகம் சென்று பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிடச் செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தினார். உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அந்தக் கிளியை தண்டத்தில் அமர்த்திக் கொண்டார்.
பிரணவேஸ்வரர்: கும்பகோணம் அருகில் உள்ள திருப்பேணுபெருந்துறையில் திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் கோயிலில் உள்ள முருகனுக்கு பிரணவேஸ்வரர் என்று பெயர். சிவன் எல்லாம் அறிந்தவராக இருக்க, பிள்ளையாகிய தான் தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி முருகன் வருத்தம் கொண்டார். எனவே, இத்தலத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்தார். அவருக்கு சிவனும் காட்சி அளித்து, நீயும் நானும் ஒன்றே எனக்கூறி அருள் புரிந்தார். பிரணவேஸ்வரர் என்ற பெயருடன் இருக்கும் இந்த முருகனை பேசுவதில் சிரமம் கொண்ட திக்குவாய் கொண்டவர்கள் வழிபட நன்மை உண்டாகும்.
மலையில் அங்கபிரதட்சணம்: மதுரை இருந்து திருவாதவூர் செல்லும் வழியில் உள்ளது வெள்ளி மலை. இங்கு உள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தின் அடியில் வேல் மட்டும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு, அதன்பின் இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் பாறையில் அங்க பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு வேண்டிக் கொண்டால் ஆணவம் நீங்கி பணிவு உண்டாகும் என்பது நம்பிக்கை.
அகத்தியரின் ஆசிரியர்: முருகப்பெருமானை குருவாக பெற்றவர் அகத்தியர். இவருக்கு தமிழ்நாட்டை முருகப்பெருமான் கொடுத்ததாகவும், அதனை அவர் பாண்டிய மன்னர்களுக்கு கொடுத்ததாகவும் திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது.  நைமிசாரயணத்தில் வசித்த அகத்தியர் தென்னகம் வந்து பொதிகை மலையில் தங்கினார் என்பர். புராணத்தின் கதையின்படி, சிவபார்வதி திருமணத்தின்போது உயிர்கள் அனைத்தும் வடபுலத்தில் ஒன்றுகூடியதால், பூபாரம் தாளாமல் பூமி தாழ்ந்தது. அதனைச் சமப்படுத்த அகத்தியர் தெற்குநோக்கி வந்தார். பொதிகைமலையில் தன் இஷ்டதெய்வமான முருகனை தியானித்தார். ஒருநாள் தெய்வீக மணம் அவரைச் சூழ்ந்தது. கண்விழித்துப் பார்த்தால் எதிரில் குமரக்கடவுள் காட்சிஅளித்தார். குருவாக இருந்து தமிழ் இலக்கணத்தை போதித்தார். அதனைக் கொண்டு, அகத்தியம்என்னும் இலக்கண நூலை எழுதினார். பொதிகைமலையில் இருக்கும் அருவிக்கும் அகத்தியர் அருவி என்றே பெயர் ஏற்பட்டது. அருவியின் அருகில் முருகனும், அகத்தியரும் தனித்தனி சந்நிதிகளில் கோயில் கொண்டு உள்ளனர்.
ஆறுமுகம், ஆறுகை: கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகன் கார்த்திகேயன் ஆனார். ஸ்ரீ தத்துவ நிதி என்ற நூலில் வித்தியாசமான தகவல் உள்ளது. முருகன் ஆறுமுகம், ஆறுகைகள் உடையவரே என்பது அது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம், ஐராவதேசுவரர் கோயிலிலும் உள்ள கார்த்திகேயர் வடிவங்கள் அழகு வாய்ந்தவை.
சங்கடம் தீர்க்கும் சகி: கவிஞர்கள் காதலைப்பற்றி கவிதை எழுதும் போது சகியே என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவர். இதற்கு தோழியே என்பது பொருளாகும். வடமொழியில் சகி என்பதற்கு மயில் எனப் பொருள். மயிலில் எழுந்தருளும் முருகனுக்கு சகி வாகனர் என்று பெயர்.
மவுனமந்திரம்: ஓம் சிவாய நம, ஓம் சக்தி, ஓம் காளி, ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் நமோ நாராயணா என்று தெய்வங்களுக்கு முன்னால் ஓம் என்ற அடைமொழியை இடுகிறோம். இந்த மந்திரம் இறைவனால் உலக உயிர்களுக்கு தரப்பட்டது. ஓம் எனச் சொல்லிப்பாருங்கள், இந்த மந்திரத்தை ஓ என துவக்கும் போது வாய் சற்று திறக்கிறது. ம் என்றதும் முடிவிடுகிறது. மனிதா! நீ வாயைத் திறக்கப் போகிறாய். நீ பேசுவது நல்ல வார்த்தையாய், அமைதியை உருவாக்கக் கூடியதாய் இருக்கட்டும். கோபப்பட்டு பேசிவிடாதே என்று எச்சரிக்கை செய்கிறது. இம்மந்திரம், இன்னொரு வகையில் கண்டதையும் சாப்பிடாதே என்றும், நாக்கு ருசிக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதையும் ஓம் நமக்கு உணர்த்துகிறது. இந்த மந்திரம் நமது வாயே நமக்கு எதிரி என்பதை புரிய வைக்கிறது. இதனால் தான், இதற்குரிய பொருளைக் கூட முருகப் பெருமான் ரகசியமாக தந்தையின் காதில் மெதுவாகச் சொல்லியிருக்கிறார். எனவே, இந்த மந்திரத்தை மவுன மந்திரம் என்பர்.
கழுத்தை சாய்த்த வள்ளி: முருகனுடன் இருக்கும் வள்ளி தன் கழுத்தை சற்றே வலப்புறம் சாய்த்தபடி கோவை மாவட்டம், பெரியகளந்தை ஆதீஸ்வரர் கோயிலில் அருளுகிறாள். இதனை, கணவனான முருகன் சொல்வதை வள்ளி காதுகொடுத்து கேட்ட கோலம் என்கிறார்கள். அருணகிரியார் இத்தலத்தை குழந்தை நகர் என்று பாடியுள்ளார்.
கங்கையின் பிள்ளை: காங்கேயன் என்ற பெயர் முருகனுக்கு உண்டு. கங்கையின் மைந்தன் என்று பொருள். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய பொறி கங்கை வடிவான சரவணப்பொய்கையில் விழுந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
நான்கு வாகனம்: முருகனுக்கு பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும் திருமால் கொடுத்த யானை, சேவல் மற்றும் ஆடு ஆகியவையும் அவரது வாகனங்களாக இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் இந்த நான்கு வாகனங்களையும் காணலாம். திருவிழாக்காலங்களில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தருள்கிறார்.
சரவணப்பொய்கை: சரவணன் என்பது வடமொழிச் சொல். இது சரவனம் என்ற சொல்லில் இருந்து திரிந்தது. சரவனம் என்றால் நாணல் காடு என்பது பொருள். முருகனை நாணல் போல் வளைந்து பணிவுடன் வணங்கினால் துன்பம் ஏதும் நெருங்காது என்பது தத்துவம். நாணல் காட்டிலுள்ள குளத்தில் பிறந்தவன் சரவணன் என்பது சரியான பொருள்.
குன்றுதோறாடல்: முருகனின் ஆறுபடை வீடுகளில் திருத்தணிக்கு குன்றுதோறாடல் என்ற புராணப் பெயர் இருக்கிறது. ஆனால், மலையும், மலை சார்ந்த பகுதியில் இருக்கும் எல்லா முருகன் கோயில்களையும் குன்று தோறாடல் என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடுகிறார். அவ்வகையில் தமிழகத்தில் சுருளிமலை (தேனி), இலஞ்சி (திருநெல்வேலி) குன்றக்குடி, விராலிமலை, வயலூர் போன்ற மலைக்கோயில்களும் குன்றுதோறாடல் என்பதில் அடங்கும்.
ஐயர் ஐயன்: முருகப்பெருமானுக்கு ஐயர் ஐயன் என்று ஒரு பெயர் இருப்பதாக திருப்புகழ் சொல்கிறது. ஐ என்றால் இறைவன் என்று பொருள். இந்த எழுத்து முன்றெழுத்துக்களை உள்ளடக்கியது. இதிலுள்ள முதல் சுழி அ என்ற எழுத்தையும், இடையிலுள்ள வளைந்த கோடு இ என்ற எழுத்தையும், அடியில் உள்ள வளைவு ய எழுத்தையும் குறிக்கும். இவற்றை அகரம், இகரம், யகரம் என்பர். இதில் அகரம் இறைவனையும், இகரம்  பசு உயிர்களையும், யகரம் பாசத்தையும் (உலகப்பற்று) குறிக்கும் பசுவாகிய உலக உயிர்கள் பாசம் என்ற கட்டில்இருந்து விடுபட்டால் இறைவனை அடையலாம் என்பது இந்த எழுத்தின் சாராம்சம். ஐயர் என்றால் முனிவர் என்றும், ஐயன் என்றால் தலைவன் என்றும் பொருள்உண்டு. முனிவர்களின் தலைவனாக விளங்குபவன் முருகன் என்பதால் ஐயர் ஐயன் என அருணகிரிநாதர் அழைத்தார்.
பெரிய துரை இவர்தான்!
திருப்புகழ் சுவாமிகள் என போற்றப்பட்டவர் வள்ளிமலை சுவாமி. இவர் வயிற்றுநோயால் அவதிப்பட்ட போது,  திருப்புகழை பாடி முருகனருளால் நோய் நீங்கப்பெற்றார். முருகனின் தீவிர பக்தரான இவர் ஏற்படுத்திய விழாவே திருத்தணியில் படிவிழாவாக ஆங்கிலப் புத்தாண்டில் நடைபெற்று வருகிறது. நூறாண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த தணிகைமணி செங்கல்வராயர் என்பவர் தன் வீட்டில்  பக்தர்களோடு சேர்ந்து திருப்புகழை பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். முருக பக்தர்கள் ஒன்று கூடி திருப்புகழ் பாடும் விஷயம் அறிந்த வள்ளிமலைசுவாமி மகிழ்ந்தார். அந்த சமயத்தில் நம் நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலப் புத்தாண்டில்  அதிகாரிகளை மகிழ்விக்க ஊழியர்கள் பரிசுப் பொருள்களுடன் சென்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இதை மாற்ற வேண்டும் என்று வள்ளிமலை சுவாமி சிந்தித்தார். துரைக்கெல்லாம் துரையான முருகனை நாடிச் செல்ல முடிவெடுத்தார். செங்கல்வராயர் வீட்டில் பாடும் அடியார்களுடன் சேர்ந்து புத்தாண்டு நாளில் திருத்தணிக்கு கிளம்பினார். நாளடைவில் பக்தர் கூட்டம் பெருகியது. திருத்தணி திருப்புகழ் திருவிழா என்றானது. காலப்போக்கில் இந்த விழா படிவிழா என்று பெயர் பெற்றது. மலைக்குச் செல்ல 365 படிகள் உள்ளன. ஒரு ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும் விதத்தில் இப்படிகளின் எண்ணிக்கை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. துரை முருகனை வழிபட ஆண்டு முழுவதும் நன்மை உண்டாகும் என்ற அடிப்படையில் விழா நடக்கிறது. இந்த விழா இப்போதும் நடந்து வருகிறது.
உன்னை மறவாத மனம் வேண்டும்
உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வெற்றி வேலைக் கையில் ஏந்தியவனே!
குற்றம் பொறுக்கும் குணக்கடலே! சிவகுருநாதனே! எட்டுத்திக்கையும் அருளாட்சி நடத்துபவனே!சரவணபவனே! என்னைக் காத்தருள் வாயாக.
கயிலைநாதர்பெற்ற தவக்கொழுந்தே! தேன்சிந்தும் கடப்பமாலையை விரும்பி அணிபவனே! தணிகாசலமூர்த்தியே! கார்த்திகேயனே! சூரபத்மனை ஆட்கொண்ட வீரனே! தேவசேனாபதியே! வள்ளிக்கு வாய்த்தவனே! என் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக.
செவ்வேள் பரமனே! விநாயகருக்கு பின் வந்தவனே! சிவசுப்பிரமணியனே! ஒளிமிகுந்த தோள்களைக் கொண்டவனே! பன்னிருகை வேலவனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே!
திருமாலின் மருமகனே! குழந்தைக் கடவுளே! எனக்கு ஆரோக்கியத்தை தந்தருள்வாயாக.
மயில்வாகனனே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே! நம்பியவரைக் காப்பவனே! காங்கேயனே! அறுபடைவீடுகளில் அமர்ந்து அருளாட்சி
புரிபவனே! தெய்வானை மணவாளனே! நவக்கிரகங்களால் உண்டாகும் தோஷங்களைப் போக்கி இன்பவாழ்வு அருள்வாயாக.
சஷ்டிநாதனே! மண்ணிலும், மரத்திலும், மலையிலும், நெருப்பிலும், நீரிலும், வாகனத்தில் செல்லும்போதும், பாதாள குகையிலும், வேறெந்த இடத்திலும் நான் இருக்கும்போது விரும்பி வந்து காத்தருளவேண்டும். ஒருகணமும் உன்னை மறவாத பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
இனியமொழிபேசும்தெய்வா னையின் மன்னவனே! வள்ளிநாயகியின் கரம் பிடித்தவனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! உன்வெற்றிக் கொடியில் இருக்கும் சேவலைக் கூவச் செய்து என் வாழ்வில் நல்ல
விடியலை உண்டாக்கு வாயாக.
தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் சக்தியுமை பாலனே! குறிஞ்சியின் முதல்வனே! துன்பம் எல்லாம் போக்கி அன்பர் வாழ்வில் ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப்பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த சிவகுருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.
தண்டாயுதபாணியே! சிங்கார வேலவனே! ஒருமையுடன் தியானிக்கும் ஞானியர் உள்ளத்தில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! கிரவுஞ்சகிரியை இருகூறாகப் பிளந்த வேலவனே! அகத்தியருக்கு உபதேசித்தஎன் ஆண்டவனே! உன் அருளால் எப்போதும் உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.
வேதத்தின் உட்பொருளே! மனதைக் கவரும் பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் குடியிருக்கும் குமரேசனே! அமுதம் போல இனிமை கொண்டவனே! சரவணப் பொய்கையில் உதித்தவனே!
அவ்வைக்கு அருள் செய்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

Leave a Reply