deepavali 2011

எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?



நல்லெண்ணெய்யில், மஹாலட்சுமி சிறந்து திகழ்கின்றாள்; நீராடப் பயன்படுத்துகிற வெந்நீரில், கங்காதேவி வாசம் செய்கிறாள் என்கின்றன சாஸ்திரங்கள். ஜலே கங்கா, தைலே லக்ஷ்மி என்பார்கள். அதனால்தான், தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று விசாரித்துக் கொள்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடலில் இருக்கிற மாசு களைகிறது. உள்ளத்து மாசுகளையும் களைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இதனை சமஸ்கிருதத்தில் தோஷ அபநயநம் என்பார்கள் அதாவது, குறைகளை நீங்குவது என்று அர்த்தம். தீபாவளியன்று தேய்த்துக் குளிக்க வேண்டிய எண்ணெயை, முதல்நாளே சிறிது அரிசியும் கொஞ்சம் ஓமமும் சேர்த்து காய்ச்சி வைத்துவிட வேண்டும். (ஓமத்திற்குப் பதில் மிளகு சேர்ப்பவர்களும் உண்டு.) புராண காரணம் எதுவும் இல்லை என்றாலும் அதிகாலையில் அதுவும் குளிர் காலத்தில் எண்ணெய் தேய்த்து நீராடுவதால் ஜுரம் போன்ற எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணெயைக் காய்ச்சியும், நீரை சூடுபடுத்தியும் குளிக்க வேண்டும் எனச் சொல்லி வைத்துள்ளனர். அதே சமயம் அரிசி மகாலக்ஷ்மியின் அம்சம். எனவே அதனை எண்ணெயில் இட்டு காய்ச்சும் வழக்கம் வந்தது என்றும் சொல்வார்கள். ஆரோக்கியம், ஐஸ்வர்யம் இரண்டுமே முக்கியம்தானே. அதுதான் கங்காஸ்நானத்தின் தத்துவம்.
எண்ணெய்க் குளியல் எத்தனை மணிக்கு
சூர்யோதயத்துக்கு முன் அப்யங்கனம்(எண்ணெய்க் குளியல்) பண்ணக்கூடாது என்பது விதி. ஆனாலும், இதற்கு வித்தியாசமாக ஒரு விதியை பகவானிடமிருந்து வரமாக வாங்கி விட்டால் பிள்ளையை(நரகாசுரனை) பற்றி விசேஷமாக இருக்கும் என்று பூமாதேவி நினைத்தாள். அதனால், தீபாவளி நாளில் மட்டும் சூரியோதயத்துக்கு முந்தி அருணோதய காலத்தில் எண்ணெய் ஸ்நானம் பண்ண வேண்டும் என்று வரம் கேட்டு அதற்காக பகவானின் அங்கீகாரத்தைப் பெற்றாள். அருணோதயம் என்றால் அருணனின் உதயம். அருணன் சூரியனுடைய தேரோட்டி. அவன் ஒரே சிவப்பாக இருப்பான். நல்ல சிவப்புக்கு அருணவர்ணம் என்று பெயர். சூரியன் அடிவானத்தில் தெரிவதற்கு முன்ஒரு முகூர்த்த காலத்துக்கு முந்தியே வானில் சிவப்பு பரவ ஆரம்பித்து விடுவதைத் தான் அருணோதயம் என்பது. ஒரு முகூர்த்தம் என்பது இரண்டுநாழிகை. அதாவது நாற்பத்தெட்டு நிமிஷம். தீபாவளியன்று சூரியோதயத்துக்கு ஒரு முகூர்த்தம் முந்தியே(அதாவது காலை 4.30 மணிமுதல் 5.30 மணிக்குள்) எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும்.  சிலர், விடிவதற்கு முன்னால் அப்யங்கனம் (எண்ணெய்க் குளியல்) செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ராத்திரி இரண்டு மணி, மூன்று மணிக்கே ஸ்நானம் செய்கிறார்கள். இப்படி செய்வது தப்பு. இந்த ஆண்டாவது காஞ்சிப்பெரியவர் சொல்றதைக் கடைபிடிப்போமா!
சாஸ்திரம் சொல்லும் ஸ்நானங்கள்!
ஞாயிற்றுக்கிழமை, சிராத்த தினம், கிரகண தினங்கள், மஹாதானம் செய்யும் காலம், உபவாச தினங்கள் ஆகிய நாட்களில் வெந்நீரில் நீராடுவது கூடாதாம். அதேபோல் எண்ணெய் ஸ்நானத்துக்கும் விதிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் ரோகம் உண்டாகும். திங்கட்கிழமை தேஜஸை அளிக்கும். செவ்வாய்கிழமை ஆயுள் குறைவுபடும். புதன்கிழமை லட்சுமி காடாட்சம் கிட்டச் செய்யும். வியாழக்கிழமை ஸ்நானம் செய்வதால் தரித்திரம் பீடிக்கும். வெள்ளிக்கிழமை தேக சுகம் கெடும், சனிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் சுகம் ஏற்படும். எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது என்று விதிக்கப்பட்ட நாட்களில் ஸ்நானம் செய்யவிதிக்கப்பட்ட நாட்களில் ஸ்நானம் செய்யவேண்டி ஏற்பட்டால் தில பரிகாரங்கள் செய்ய வேண்டி உள்ளன. ஞாயிற்றுக்கிழமையில் புஷ்பமும், செவ்வாய்கிழமையில் மண்ணும், வியாழக்கிழமையில் அருகம்புல்லும், வெள்ளிக்கிழமையில் ஒரு துளி ஜலமும் எண்ணெயில் சேர்த்துக்கொள்ள வேண்டுமாம்.

Leave a Reply